கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2

கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.

முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

‘இளமை உன் தோளில்

இருக்கும் போதே

எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்ற பாடலில்

இமயமலை ஆகாமல்

எனது உயிர் போகாது

சூரியன் தூங்கலாம்

எனது விழி தூங்காது

என்ற அற்புதமான வரிகளைத் தந்தவர் வைரமுத்து.

முதியவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக பல பாடல்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான்

டில்லிக்கு ராஜா நாளும்

பாட்டி சொல்லைத் தட்டாதே

பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்

பாட்டி சொல்லைத் தட்டாதே

கிழவிக்கு அறிவுண்டு

குமரிக்கு அழகுண்டு

அழகுலே அறிவை நீ மறக்காதே

என்று விளையாட்டுப்போக்கில் முதியவர்களின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார்.

பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் அவர்கள்தான் இந்த நாட்டின் தூண்கள் என்பதை

‘இந்தியா தங்கப்பதக்கம்

ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே’ என்றும்

‘விளையாட்டுச் சிறுபிள்ளை

வீரசிவாஜியா ஆனதும் பெண்ணாலே’ என்றும் எழுதியுள்ளார்.

இயற்கையை அதிகம் நேசித்து சுவாசித்து தன் கவிதையில் வாசித்துள்ளார்.

புல்வெளி புல்வெளி தன்னில்

பனித்துளி பனித்துளி நின்று

தூங்குது தூங்குது பாரம்மா

அதைச் சூரியன் சூரியன் வந்து

செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா

இதயம் பறவை போல் ஆகுமா

பறந்தால் வானமே தூரமா?

என்று இயற்கையோடு உறவாடியவர்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதை பல கவிஞர்கள் பாடியுள்ளார். காலத்திற்கு ஏற்ப ரசனைகள் இருந்தது என்பது உண்மை.

தற்காலத்துக்கு ஏற்ப சிங்கப்பூர் தரணியை ஆண்ட தமிழனே விரும்பிய பாட்டைக் கொடுத்தான். கவிப்பேரரசு வைரமுத்து. பொற்காலம் படத்தில்

தஞ்சாவூரு மண்ணு எடுத்து

தாமிரபரணி தண்ணிய விட்டு

சேத்து சேத்து செஞ்ச பொம்ம

இது பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்மை

எத்தனையோ பொம்மை செஞ்ஞேன் பொன்னம்மா

அது அத்தனையும் உன்னைப் போல மின்னுமா, பதில் சொல்லமா

தந்தானே தந்தானே தந்தானக் குயிலே

சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு

பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது குன்னூரு

காது செஞ்ச மண்ணு அது மேலூரு – நான்

உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு

கருப்பு கூந்தல் செஞ்சது கலிக்கப்பட்டி மண்ணுங்க

தங்கக்கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க

வாய் அழகு செஞ்சதெல்லாம் வைகை ஆத்து மண்ணுங்க

பல் அழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க

நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்திசுத்தி வந்தேங்க

நிலாவில் மண் எடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

தங்கவயல் மண் எடுத்தேன் தோளுக்கு – நான்

தாமரைப்பாடி மண் எடுத்தேன் தனத்துக்கு

வாழையூத்து மண் எடுத்தேன் வகுத்து அட

கஞ்சனூரு மண் எடுத்தேன் இடுப்புக்கு

ஊரெல்லாம் மண் எடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு

என் உசுர நான் குடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு

மேற்கண்ட பாடலை நான் ஏன் முழுமையாக எழுதினேன் என்றால் கவிப்பேரரசு அவர்கள் எழுதிய பாடல்களிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கது பொற்காலம் படத்தில் வந்த மேற்கண்ட பாடல்தான். அந்த சிறப்பான சம்பவத்தை இங்கே குறிப்பிடுகின்றேன்.

ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து வு ம் அவரது நண்பர் முஸ்தபாவும் சிங்கப்பூர் சென்று தங்கிருந்தார்கள். ஒருநாள் சிங்கப்பூர் விமானநிலையம் ஓடுதளம் வெளியில் கவிப்பேரரசும், முஸ்தபாவும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு அற்புதமான மனிதர் அங்கே வந்தார்.

வைரமுத்துவைப் பார்த்து “நீங்கள்தான் கவிப்பேரரசு வைரமுத்துவா?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு கவிப்பேரரசுவும் “ஆம் அய்யா, என் பெயர்தான் வைரமுத்து” என்று பண்பான தமிழில் அன்பாகக் கூறியிருக்கிறார்.

“அய்யா, கவிப்பேரரசே உங்கள் பாடல் என்றால் எனக்கு உயிர். என் பூர்வீகம் தமிழ்நாடு. என் மூதாதையார்கள் அங்கே வாழ்ந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்த ஊர் என்று தெரியவில்லை. உங்கள் தஞ்சாவூரு மண்ணை எடுத்து பாடலைக் கேட்டுதான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்று கூறினாராம்.

அந்த அற்புதமான மனிதர் வேறு யாரும் அல்ல. அவர்தான் சிங்கப்பூரின் அன்றைய முதல் குடிமகன் திரு.நாதன் அவர்கள்.

தமிழின் பெருமையைத் தரணிக்கு கொடுத்த பெருமை கவிப்பேரரசைச் சாரும். இந்த வரலாற்று உண்மையை எதிர்வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று ஊர்தோறும் தமிழின் பெருமையைச் சொன்னவ‌ர் உ.வே.சா.

இன்று தமிழ்மொழி இலக்கியத்தை தரணிக்குச் சொல்லும் அருந்தமிழ் புதல்வன் கவிப்பேரரசு வைரமுத்து என்றால் அது மறைக்க முடியாத உண்மை.

தமிழரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒலிப்பது வைரமுத்துவின் பாட்டுதான்.

காற்றின் அலைவரிசை கேட்கும்வரை

கவிப்பேரரசின் கவிதை தவழ்ந்து வரும்

பின்பு நடந்து வரும்

ஒருநாள் நோபல் பரிசோடு ஓடி வரும்

வாழ்க வைரமுத்து!

உம்மால் வளரட்டும் தமிழ் உலகம்!

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
கைபேசி:  9486027221

இதைப் படித்து விட்டீர்களா?

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.