மௌனம்! கவிதை

தொலைந்து போன
மௌனங்கள்
தேடப்படுகின்றன!

மொழிகளில் உறைந்த
மௌனங்கள்
சொற்களின் இடைவெளி
புகுந்தன!

சிறு மரத்து நிழல் தேடிய
ஆசுவாசங்களின்
பின்னணி மௌனங்கள்
எதையோ கிளறின!

பெருங் கூச்சல்
பொழுதுகளின்
போர்க்களங்களில்
மழை ஓய்ந்த
தருணப் பூக்களில்
படர்ந்திருந்தது
துளி மௌனம்!

எங்கோ கதவுகளை
அடைத்துக் கொண்டது
இறுக்க மௌனம்!

வயப்படாத பல
சுகமான பொழுதுகளை
அடைந்துவிடப் பாய்கிறது
அடர் மௌனம்!

அந்நாளின்
அக்கணத்தின்
விடைபெற வியலாப்
பெரும் மௌனமே
சுட்டியது
எதிர்பாராதொரு
பெரும் பயணத் திசையை!

விதி வழி
விளைந்ததென
அசை போடுகிறது
மௌனமாய்
மனம்!

எஸ்.மகேஷ்
சென்னை

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.