எனக்குக் கொஞ்சமும்
தொடர்பில்லாத
இசையின் ஓலம்
நாய்களின் வழி
நற நறவென்று
உச்சி பிடித்துத்
தீர்ந்து விட வழிகிறது பேரருவியாய்….
தீர்ந்த பாடில்லை
சாகாத நரம்புகள்
புடைத்து எழுகின்றன
வீணையின் தெறிப்பிலிருந்து
கிளம்பிய இசை போல்
கருகிய மலடியின்
வயிற்றிலிருந்த கருவிலிருந்து
புலம்பும் ஓசை ஒத்து
மல்லாந்து கால்மடக்கி
சோம்பல் முறிக்கும்
வீட்டுநாயின்
முந்தைய நாள் கனவில்…
குரைத்து ஒய்ந்த
நடு நசியில்-
அது கண்ட
புளியமரக் கிளையொன்றில்
அழுகித் தொங்கிய
பிணத்தின்
அகோரப் பயமுறுத்தல்
எதிர்வீட்டுச்
சிப்பிப்பாறை நாயின் வாயில்
வசமாய்க் கவ்விச் சுழற்றியடித்த
குரூரம் நினைத்து…
தெரு நாய்கள்
வெருண்டு, கத்தித் தொலைத்தன
குடல் தெறித்த வெறியுடன்
கூடவே ஈனக் குரலெடுத்து
காட்சிகள் இரண்டு பக்கமும்
விரிகின்றன
மருண்ட பார்வையில்
அசைந்த கிளையினூடே
அதே துர்நாற்றம் தாங்காது
தெறித்த ஊர் நாய்
குட்டிச்சுவர் முகடேறி
மூன்றாம் தெருக்கோடி
வழிப்பிள்ளையார் சிலை பின்னே
உடல் சுருட்டி
வானம் பார்த்துக் கேவியது
நாய்களுக்கும் கூட
வீதிகள் சொந்தம் – அதில்
மனிதர்கள் குரைக்கிறார்கள்
நாக்குத் தொங்க….

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!