வாழைத்தண்டு கூட்டு அருமையான தொட்டுக்கறி ஆகும். இது சுவை மிகுந்ததும், ஆரோக்கியமானதும் ஆகும். இதனை எளிதாகச் செய்யலாம்.
வாழைத்தண்டினை சுத்தம் செய்வது சிரமம் என்பதால் இதனை பலரும் ஒதுக்கி விடுவர். ஆனால் அது உடலுக்கு மிகவும் நன்மை பயப்பது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
வாழைத்தண்டின் கடினமான வெளித்தோல்களை நீக்கிவிட்டு மென்மையான உள்பகுதியை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
இனி சுவையான வாழைத்தண்டு கூட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 200 கிராம்
பாசிப்பருப்பு – 20 கிராம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
தக்காளி – 1 எண்ணம் (சிறியது)
சீரகம் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசால் தயார் செய்ய
தேங்காய் – 2 கீற்று (மெல்லியது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)
சீரகம் – 1/4 ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
வாழைத்தண்டினை சுத்தம் செய்யும் முறை
வாழைத்தண்டினை 1/2 அங்குல தடிமனுக்கு வட்டமாக வெட்டவும்.
வட்டமாக வெட்டிய பகுதியின் மேற்பரப்பில் தோன்றும் நாரினை ஆட்காட்டி விரலால் சுற்றி எடுத்துவிட்டு தண்ணீரில் போடவும்.
இவ்வாறாக வாழைத்தண்டு முழுவதையும் வட்டமாகத் துண்டுகளாக வெட்டி நாரினை நீக்கி தண்ணீரில் போடவும்.
வட்டமாக வெட்டிய வாழைத்தண்டினை சதுரத்துண்டுகளாக அரிந்து தண்ணீரில் சேர்க்கவும்.
சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக வெட்டிக் கொள்ளவும்.
தாளிக்க தேவையான சின்ன வெங்காயத்தை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பாசிப் பருப்பை அலசிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசாலா அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் பாசிப்பருப்பைச் சேர்த்து மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் சீரகத்தைச் சேர்க்கவும்.
அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, வாழைத்துதண்டுத் துண்டுகள், அரைத்த மசாலா விழுது, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
பாசிப்பருப்பு மூழ்குமளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும். ஏனெனில் வாழைத்தண்டு தண்ணீர் விடுவதால் அதிகளவு தண்ணீர் சேர்க்கும் போது கூட்டு மிகவும் நீர்த்துப் போய்விடும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து ஒரு சேரக் கிளறி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.
சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.
இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சுவைக்கலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் தேங்காய் சேர்க்காமல் கூட்டு தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!