அம்மிக்கல்லும் ஆயாவும்

நண்பனின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தேன். எனக்கு நண்பனை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் அவ்வளவாக பழக்கமில்லை.

திருமண வீடு வழக்கமான தனது கலகலப்புடன் சொந்தம், சுற்றம், நட்பு என ஒரே பரபரப்பு.

‘நானும் வந்து விட்டேன்’ என்று நண்பனை பார்த்து கையசைத்து விட்டு ஒரு ஓரமாய் எங்கே அமரலாம் என இடம் தேடினேன்.

அப்போது 85 வயசுக்கு மேலே புதுப்புடவை கட்டி ‘ஜம்’முனு அமைதியா அமர்ந்திருந்த ஆயா பக்கத்தில் உட்கார்ந்தேன்.

சும்மா மொபைல் நோண்டாமல், ஆயா கிட்ட பேச்சு கொடுத்தேன்.

திருமணம் நடப்பது ஆயாவின் கடைசி மகனின் பேத்திக்கு என்ற விஷயம் தெரிந்தது.

ஆயாக்கு மொத்தம் மூன்று மகன் இரண்டு பெண். கொள்ளு பேத்தி சமஞ்ச வரைக்கும் பாத்தாச்சு ஆயா…!

கேட்டவுடன் ஒரு பக்கம் ஆச்சரியத்தில் ஆயாக்கு “வாழ்த்துக்கள்!” கூறினேன்.

“நகை நட்டு, புது சேலை, கொள்ளு பேரன் பேத்தி, எவ்வளவு சந்தோஷமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கீங்க. இதெல்லாம் பார்க்கவே கொடுப்பினை வேணும் பாட்டி” என்றேன்.

அதற்கு ஆயா “அந்த மூலையில் இருக்க அம்மிக்கல்லப் பாரு! எப்படி ‘பளபள’ன்னு புதுசா இருக்கு. ஆனா மத்த நேரத்துல அது எங்க இருக்கும் எப்படி இருக்கும் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

“மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தவுடன் அம்மிக்கல்லுக்கு அதிகம் வேலை இல்லை என்பதால் பெரும்பாலும் அது ஏதாவது ஒரு மூலையில் அம்மிக்கல்லே தெரியாத அளவுக்கு அதன் மேல் வீணா போன பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்திருப்போம்.

அதை தூக்கிப் போடவும் மனசு இருக்காது. அழுக்கு படிந்த ஒரு அடசல்” என்று கூறினேன்.

ஆயாவும் “சரிதான், அதேபோல அவசர தேவைக்கும் சுப காரியங்களுக்கும் சடங்கு சம்பிரதாயத்துக்கு மட்டும் பயன்படும் ஒரு பொருள். அப்படித்தான் நானும்” என்றார்.

“தேவை இருக்கும் பொழுது, விருப்பமே இல்லை என்றாலும் வேலை செய்யாமல் இருக்க முடியாது. தேய்ந்து ஓடா போனாலும் மீண்டும் கொத்தி கொத்தி புதுப்பித்துக் கொள்வார்கள்.

இதற்கு மேல் இது பயன்படாது என்று தெரிந்தவுடன் மூலையில் வைத்து விடுவார்கள். அவருடைய தேவைக்காக மட்டுமே அவ்வப்போது பயன்படுத்துவார்கள். மரியாதை கொடுப்பது கூட சாங்கியதற்கு மட்டுமே.

அப்படித்தான் நானும். ஏதோ நகை புடவை எல்லாம் போட்டு இன்னைக்கு மட்டும் இப்படி ராணி மாதிரி வேஷம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

மற்ற நேரத்தில் எவ்வளவு கஷ்டம் தெரியுமாப்பா!

ஆயாக்கு சமாதானம் கூறி டாப்பிக்கை மாற்றி கொஞ்சம் கலகலப்பாக சிரிக்க வைத்து விட்டு, பந்தி ரெடியாயிருச்சு வந்த வேலையை கவனிக்க வேண்டியது தான் என்று கிளம்பினேன்.

ஆயா சொன்னது மாதிரியே சடங்குக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர். மீண்டும் ஆயா தனது இருக்கையிலேயே போய் அமர்ந்து கொண்டார்.

எனது எண்ண ஓட்டத்தில்.. ஐந்து குழந்தைகளைப் பெற்று கொள்ளு பேரன் பேத்தி வரைக்கும் பார்த்த ஆயாக்கு இந்த நிலை என்றால், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்று மிக்ஸி கிரைண்டர் பயன்படுத்தும் நமக்கு எந்த நிலைமையோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது மனைவியின் செல் போன் அழைப்பு வந்தது.

கதி. பழனியப்பன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.