ஒரு பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதி சமீபத்தில் என்னை சந்தித்தார்.
அவர் மாணவ மாணவியர் போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவான மென்பொருள் ஒன்றினை தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாகக் கூறி, அதனைப் பற்றி எனக்கு விளக்கமளித்தார்.
தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பது என்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு பாடத்தைப் பற்றியும் நேர்த்தியான விளக்கங்கள், எளிய முறையில் வினாக்களை எதிர்கொள்ளத் தேவையான யுக்திகள், விரிவான வினா விடைகள் மற்றும் பல்வேறு தேர்வுப் பயிற்சிகள் என சிறப்பாகச் செய்து காண்பித்தார்.
இன்றைய தினம் கணினி மென்பொருள் பயன்பாடு மற்றும் இணையதள சேவைகள் ஆகியவை அறிவியல் நமக்கு வழங்கிய வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதனை அலசி ஆராயவும் இந்த சேவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன.
ஏன் இந்த காலகட்டத்தில் வகுப்பறைகளே இணையமயமாகிப் போனது என்பது உண்மைதானே.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரசித்தி பெற்ற அறிவியல் புத்தகத்தையோ அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் சஞ்சிகைகளையோ பார்க்க மற்றும் படிக்க வேண்டுமென்றால் நாம் IIT எனப்படும் இந்திய தொழில்நுட்பக்கழகம் அல்லது பெங்களுருரில் அமைந்திருக்கும் IISC எனப்படும் இந்திய அறிவியியல் மைய நூலகத்திற்குதான் செல்ல வேண்டும்.
அவற்றை பிரதி எடுத்தல் என்பது மிகவும் கடினமான விஷயம். இன்று இந்த அரிய பொக்கிஷங்களை எல்லாம் நம் விரல்நுனியில் அலைபேசி வழியே கூட பதிவிறக்கம் செய்து படிக்க முடியும்.
அந்தக் காலகட்டத்தில் நாங்கள் கூட தேர்ந்த பேராசிரியர்களின் விரிவுரைகளை குறிப்புகளாக எழுதி வைத்து படித்த ஞாபகம் வருகின்றது.
பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பேசி, நான் கேட்ட சுவாரசியமான தகவல் ஒன்று சொல்கிறேன்.
ஆசிரியருக்காக பிச்சை பெற்று கல்வி கற்றவர்
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் திண்ணைப் பள்ளிக்கூட படிப்பினை முடித்தார்.
உயர்கல்வி யாரிடமாவது கற்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு. அவரிடம் அதற்கு வசதியில்லை.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த ஊருக்கு அன்னக்காவடி சாமியார் ஒருவர் வந்தார்.
அன்னக்காவடி சாமியார்கள் காவி உடை அணிந்திருப்பார்கள். தங்களின் தோள்பட்டையில் தராசு போன்று பிச்சைப் பாத்திரங்களைத் தூக்கிச் செல்வார்கள்.
ஒரு உலக்கை போன்ற மரத்தடியின் இருமுனைகளிலும் இரும்புச் சங்கிலிகளைத் தொங்கவிட்டு அதில் ஒரு உலோகத்தட்டினை இணைத்து அதன் மேல் பானைகளை வைத்திருப்பார்கள். இதற்குப் பெயர் அன்னக்காவடியாகும்.
ஒரு பாத்திரத்தில் சாதமும் மற்ற பாத்திரத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.
ஒரே ஊரில் தங்கி இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள்.
இப்போது இந்த ஊருக்கு வந்திருக்கும் அன்னக்காவடி சாமியார் சிறந்தப் படிப்பாளி என்றும், தமிழ் இலக்கணம் கரைத்துக் குடித்தவர் என்றும், அதிலும் அணி இலக்கணமான தண்டியலங்காரத்தில் ஒப்பிலாப் புலமை பெற்றவர் என்றும் ஊரார் சொன்ன வார்த்தைகள் அந்த ஏழை மாணவர் காதுக்கு எட்டியது.
அவரும் சாமியாரிடம் வந்து தமக்கு பாடம் சொல்லித்தர வேண்டினார்.
அதற்கு அந்த அன்னக்காவடி சாமியாரும் “சரி உனக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன். அதற்கு நீ எவ்வளவு சன்மானம் கொடுப்பாய்?” எனக் கேட்டார்.
மாணவரோ “ஐயா! என்னிடம் தங்களுக்கு தரும் அளவுக்கு பணம் ஏதுமில்லை, ஆனால் அதற்குப் பதிலாக நான் உங்களுக்கு பணிவிடை செய்கிறேன்” என்றாராம்.
அதற்கு சாமியார் “நானோ ஒரு ஆண்டி! பிச்சை எடுக்கும் பஞ்சப் பரதேசி. எனக்கு எதற்கப்பா பணிவிடை?” எனச் சிரித்து விட்டு, “சரி! நீ ஒன்று செய்! இந்த அன்னக்காவடியை சுமந்து கொண்டு நான் பிச்சை எடுக்கும் இடமெல்லாம் என்னுடன் வா. நான் ஓய்வாக இருக்கும் நேரமெல்லாம் உனக்கு பாடம் சொல்லித் தருகிறேன்.” என்றாராம்.
உடனே அந்த மாணவரும் மனம் மகிழ்ந்து அன்னக்காவடியை தோளில் சுமந்து சாமியாரோடு பிச்சைக்குச் செல்லத் தொடங்கினார்.
ஊரே இந்தக் காட்சியினைக் கண்டு அதிசயித்தது. அந்த ஏழை மாணவர் யார் தெரியுமா?
இவர் கலிகாலக் கம்பர் என்றும், ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர் என்றும் போற்றப்பட்ட ‘திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை‘ அவர்கள் தான்.
தமிழ் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் மற்றும் கந்தசஷ்டி கவசம் எழுதிய பாலதேவராயன் போன்ற தமிழ் வித்தகர்களுக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசானும் இவர்தான்.
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” எனும் அவ்வையரின் பாடல் வரிகளைப் படித்திருக்கிறோம்.
ஆனால் தமது ஆசிரியருக்காகப் பிச்சை பெற்று படித்த பெருந்தகை ‘திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ அவர்கள் தான்.
இந்தக் கஷ்டங்கள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு இல்லை.
கற்க நினைக்கும் மற்றும் கற்க வேண்டிய விஷயங்களெல்லாம் அவர்களின் விரல் நுனியில் உள்ளது.
மாணவர்களுக்கு வேண்டியதெல்லாம் கற்க வேண்டும் எனும் ஆர்வம் மட்டுமே!
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!