குல்பி ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனத்துள்ளலுக்கு உள்ளாவர்.
அதுவும் குல்பி ஐஸ்கிரீமை நம் வீட்டில் தயார் செய்து தருவது என்றால் கொண்டாட்டம் தான்.
வாருங்கள், குல்பி ஐஸ்கிரீம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
சீனி(வெள்ளைச் சர்க்கரை) – 100 கிராம்
முந்திரி பருப்பு – 25 கிராம்
பிஸ்தா பருப்பு – 25 கிராம்
பாதாம் பருப்பு – 25 கிராம்
ஏலக்காய் – 2 எண்ணம் (நடுத்தரமானது)


செய்முறை
முதலில் ஏலக்காயை இரண்டாக பிய்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரவென அடித்துக் கொள்ளவும்.

பாலை தண்ணீர் சேர்க்காமல் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

பால் பொங்கி கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை சிம்மிற்கும் சற்றுக் கூடுதலாக வைத்து சூடேற்றவும்.
பாலில் ஆடை படர்ந்தால் ஆடையை எடுத்து பாலிலே போடவும்.
பாலானது சுமார் 600 மில்லிலிட்டர் வரும் வரை (பாதிக்கும் சற்று கூடுதலாக) அடுப்பில் வைத்து கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்கவும்.

பின்னர் கொரகொரவென அடித்து வைத்துள்ள பருப்பு வகைகளைச் சேர்த்து சுமார் 500 மில்லி லிட்டர் வரும்வரை நன்றாக காய்ச்சவும்.

பின்னர் கலவையுடன் சீனியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து கலவையை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.



கலவையானது நன்கு ஆறியவுடன் அதனை குல்பி அச்சில் அல்லது சின்ன டம்ளரில் ஊற்றி வாயினை மூடவும்.

(டம்ளரை பயன்படுத்தும் போது ஐஸ்கிரீம் குச்சியை நடுவில் வைத்து அதன் வாயினை சிறிய கவரால் மூடி இரப்பர் போட்டு சுற்றவும்.)

கலவை அச்சு அல்லது டம்ளரை ப்ரீசரில் சுமார் 8 மணி நேரம் வைக்கவும்.

பின்னர் கலவை அச்சு அல்லது டம்ளரை வெளியே எடுத்து படத்தில் காட்டியபடி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு அச்சிலிருந்து வெளியே எடுக்கவும்.

சுவையான குல்பி ஐஸ்கிரீம் தயார்.

குறிப்பு
குல்பிக்கு பாலினை தேர்வு செய்யும்போது வெண்ணை நீக்கப்படாத பாலினைத் தேர்வு செய்யவும்.
விருப்பமுள்ளவர்கள் வால்நட் உள்ளிட்ட வேறு பருப்புகளையும் சேர்த்து குல்பி தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!