கோடையில் கிடைக்கும் மாங்காய்களைக் கொண்டு செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும். ஏனெனில் கோடை காலம் மாங்காய் சீசன் ஆகும்.
இந்த ஊறுகாயை சாத வகைகள், தோசை, சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் சைடிஷாகப் பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் பழைய சாதத்திற்கு இந்த ஊறுகாய் மிகவும் பொருத்தமானது என்று கூறலாம்.
நீங்களும் கோடையில் மாங்காய் ஊறுகாயைச் செய்து அசத்துங்கள்.
இனி சுவையான மாங்காய்ஊறுகாய் செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளிப்பு மாங்காய் – 1 (பெரியது)
மிளகாய் வத்தல் – 8 எண்ணம்
உப்பு – 6 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ¾ ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் மாங்காயை நன்கு கழுவி மேற்பரப்பில் ஈரம் இல்லாமல் காய வைக்க வேண்டும். பின் மாங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


மிளகாய் வத்தலை வெயில் நன்கு காய வைத்து பின் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.
கடுகையும், வெந்தையத்தையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பின் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.


கறிவேப்பிலையை உறுவி அலசி தண்ணீர் இல்லாமல் உலர விடவும்.
நறுக்கிய மாங்காய் துண்டுகளில் உப்பினைச் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் ஊறிய மாங்காய்த் துண்டுகளுடன் மிளகாய் வற்றல் பொடி, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஒரு சேரக் கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.



வாணலியில் நல்ல எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின் அதனுடன் மாங்காய் கலவையைக் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

மாங்காய் வெந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்.

இந்த ஊறுகாய் நன்கு ஆறியவுடன் பாட்டிலில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும். குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
மாங்காய் ஊறுகாய் இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் பொடியைக் கொண்டும் ஊறுகாய் தயார் செய்யலாம்.
ஊறுகாய் தயார் செய்யும் போதும், உபயோகிக்கும் போதும் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!