வாழ்வோம் வா – கவிதை

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பார்க்கலாம் வா.

உற்றார் உறவினர்தான்
உன் வாழ்க்கைக்கு அப்புறம் தான்

கொடுப்பது உன் குணம் என்றால்
கெடுப்பது உன் குணம் அன்று

கெடுப்பது உன் குணம் என்றால்
கொடுப்பது உன் குணம் அன்று

கொடுப்பதும் கெடுப்பதும் கொண்ட
மனம்தான் இன்று ….
வேண்டுவோர்க்கு கொடுப்பது
வேண்டாதோர்க்கு கெடுப்பது

நீயாவது என்னுடன் வா

நாமாவது மாறாத குணம் கொண்டு
மாறாத மனம் கொண்டு வாழ்வோம் நன்று

பிறருக்காய் வாழ்வதும் தீது
பிறவிக்காய் வாழ்வதும் தீது

உதவிக் கை தாழ்வதும் தீது
உதவிக்காய்த் தாழ்வதும் தீது

நாம் வாழ பிறரைப் பார்க்காதே…
நம் வயிற்றுப் பெருமானே நம் வழிகாட்டி…

எவ்வளவு சேர்த்தாலும் இவ்வளவே போதுமடா…

ஆயிரமாயிரம் ஆடைகள் இருப்பினும்
மானம் காப்பதென்னவோ ஒன்றுதானடா…

எத்துணை பாடுபட்டு கட்டிய உன்
மாளிகையில் உன் எண்ணமெல்லாம்
நீ இருக்கும் வரை மட்டுமே….

இருக்கும் வரை இணைந்திருப்போம்
இமயம் வரை
உயர்ந்திருப்போம்

எதைத் தேடி ஓடுகின்றாய்
ஏன் என்றால் சாடுகின்றாய்
போதுமென்றால் ஊடுகின்றாய்

எத்தனை முறை பாடம் கற்பாய்
இயற்கை அன்னை தந்த பாடங்கள்
எல்லாம்… மறந்தே போனதேனோ…
எத்தனை முறை பாடம் கற்பாய்

இனியாவது

என்னுடன் வா

நாமாவது மாறாத குணம் கொண்டு
மாறாத மனம் கொண்டு வாழ்வோம் நன்று

சுகன்யா முத்துசாமி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.