கலாட்டா கல்யாணம்!

திருக்கடையூர் அபிலாஷ் ஹோட்டல் தங்கும் விடுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்த குடும்பத்தின் ஐந்து வயது பையன் சந்தீப்பை காணவில்லை.

வாலிப வாழ்க்கையில் அப்படியும் இப்படியும் கஷ்டத்தோடும் நஷ்டத்தோடும் அல்லல்பட்டு திருமணம் செய்து, முதுமை வாழ்க்கை வரும்போது சற்று வெற்றி பெற்று ஒருவித பொறுப்புணர்வுடன், ஒருவித மன நிறைவுடன் பேரன் பேத்திகளோடு கொண்டாடப்படும் வைபவம் சஷ்டி அப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்), பீம ரத ஷாந்தி (எழுபதாம் கல்யாணம்), மற்றும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாவது வயது நிறைவு திருமணங்கள்.

மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்கடையூர் இது போன்ற திருமணங்களுக்கென்றே மிகவும் பிரசித்தி பெற்றது.

பல மாநிலங்களிலிருந்து தினமும் காலையில் இருபது, மாலையில் இருபது என்று முதியோர் திருமணங்கள் பத்தடிக்கு பத்தடி பரப்பில் பக்கத்து பக்கத்தில் தொடர் வரிசையில் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.

காலையிலும் மாலையிலும் நடக்கும் கோ பூஜையிலும் கஜ பூஜையிலும் கலந்து கொள்ளும் முதிய மணத்தம்பதிகளின் ஆளுமையில், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்றத்தாழ்வுகளை அன்றாட வாழ்க்கை போராட்டம் ஏற்றியுள்ளது என்பது நிதரிசனம்.

ஒவ்வொரு வயோதிக மாப்பிள்ளையும் மற்ற மாப்பிள்ளைகளைப் பார்த்து “இனிமேல் வயாக்ரா, டியூரெக்ஸ், கோஹினூர் போன்ற சம்சார சமாச்சாரங்களை குறைத்து கொள்வதுடன் ‘ஜானி வாக்கர்’க்கு பதிலாக ‘ஜாலி வாக்கிங்’ நிறைய செல்ல வேண்டும்.

இல்லையென்றால் அடுத்த எல்லைக்கோடான பீம ரத ஷாந்தி, சதாபிஷேகம் வரை வாழ்வது கடினம் என்பதை மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு.

முதல் நாள் பகல் மூன்று மணி அளவில் ‘திமுதிமு’வென்று தம்பதிகள் மற்றும் உறவினர்கள் தங்கும் விடுதி வந்திறங்கி மறுநாள் மூன்று மணி அளவில் வைபவத்தை முடித்துக் கொண்டு மயிலாடுதுறை வழியாக விட்ட வாழ்க்கையை தொடரப் போய் விடுவார்கள்.

தினம் தினம் திரளாக பல்வேறு மாநில தம்பதிகளும் உறவினர்களும் வந்து செல்வதால் விடுதிகள் ஒரே மகிழ்ச்சி, கூச்சல் களமாகிவிடும்.

அவ்வளவு களேபரத்தின் மத்தியில் விடுதியின் நெடிய நடைபாதையில் (காரிடார்) ஒரு சிறிய பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட்டுடன் ஒரு மஞ்சள் குஷன் ஸ்பான்ஜ் பந்துடன் ஐந்து வயது பேரன் ஆரூரனுடன் விளையாடிக் கொண்டிருந்தார் முதிய மணமகன் பிச்சுமணி.

விடுதியின் கோடியிலமைந்த ‘ஆனந்தம்’, ‘மங்களம்’, ‘அறுசுவை’ போன்ற ரெஸ்ட்டாரெண்ட்களில் உணவருந்த வந்து போகும் சராசரியான மனித ரயில் வண்டிகட்கு, அவ்வப்போது விளையாட்டை நிறுத்தி வழி விட்டுக்கொண்டு பேரன் மற்றும் பக்கத்து அறைகள் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார் பிச்சுமணி.

ஒருமுறை பேரன் பந்தை ஓங்கியடிக்க அது பக்கத்தில் நின்றிருந்த ஒரு சிறுவனின் கண்ணில் பட்டுவிட, அவன் அழத் தொடங்கினான்.

அவன் அப்பா ஓடோடி வந்து பிச்சுமணி தாத்தாவை ஹிந்தியில் ஆப் கோ பாகல் ஹோ? (நீங்க என்ன பைத்தியமா) எனத் திட்ட இடம் களேபரமானது.

ஒருவழியாக அந்த கலாட்டா முடிந்து அழும் மகனை, அவன் தந்தை பிச்சுமணியை முறைத்துக் கொண்டே, “பாகல் ஆத்மி” (பைத்தியக்காரன்) என்று முணுமுணுத்துக் கொண்டே, அவர் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவ்வளவு பேர் முன்னிலையிலும் தாத்தா பிச்சுமணி கடிந்து கொள்ளப்படுவதை பார்த்த பேரனுக்கு இனம் புரியாத பயம் கலந்த குழப்பம்.

சற்று நேரத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் கலந்து கொண்ட சந்தீப் என்னும் சிறுவனை காணவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி அளித்தது அனைவருக்கும்.

மராட்டிய குடும்பம் இன்னும் சற்று நேரத்தில் தங்கும் அறைகளை காலி செய்துவிட்டு, அன்றிரவு ரயிலை பிடித்து நாக்பூர் திரும்ப வேண்டும்.

அவர்கள் அறைகளை ஆக்கிரமிக்க, அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்த கல்யாணக் குடும்பம் அரை குறை ஹிந்தியில் அவர்களை அவசரப்படுத்திக் கொண்டிருந்தது.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விடுதியின் சி.சி.டி.வி காமிராக்கள் மூலமாக ஆய்வு செய்தனர்.

அதில், முக்காடிட்ட இரு பெண்கள் மற்றும் தொப்பியணிந்த இரு ஆண்கள் சந்தீப்பை அரணாக அணைத்து அப்படியே தூக்கிக் கொண்டு செல்வது தெரிந்தது.

விடுதியின் வெளியே கார் பார்க்கிங்கில் காருக்கு அடியே விழுந்த பந்தை எடுக்க முற்பட்டபோது அவனையும் அந்த நால்வரையும் காணவில்லை; அந்த கருப்பு காரையும் காணவில்லை.

கலங்கிய கண்களோடு மொழி தெரியாத புதுஇடத்தில் சந்தீப்பின் பெற்றோர் தன் ஒரே மகனை இழந்து அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த விதம் அனைவரையும் நெகிழ வைத்தது.

‘தன் பேரனோடு விளையாடும்போது விளையாட்டில் கலந்து கொண்ட சந்தீப் காருக்கடியில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சியில் காணாமல் போய் விட்டானே’ என்ற எண்ணம் பிச்சுமணியை வாட்டி வதைத்தது.

‘ஒருவேளை நாம் பேரனோடு விளையாடாமல் இருந்திருந்தால் சந்தீப் காணாமல் போயிருக்கமாட்டானே’ என்ற குற்ற உணர்ச்சி அவரை துளைத்து எடுத்தது.

“இதற்குத்தான் வந்த இடத்தில் என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு என்று அப்போதே சொன்னேன்” என்று பிச்சுமணி மனைவி ஜெயா வேதனை தீயில் நெய் ஊற்றினாள்.

சந்தீப் கிரிக்கெட் விளையாடும்போது கடத்தப்பட்டான் என்பதால் முதலில் போலீசாருக்கு பிச்சுமணி குடும்பத்திற்கும் கடத்தல் குழுவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு பிச்சுமணியின் குடும்பத்தை சந்தேக வளையத்தில் இருந்து விடுவித்தனர்.

இருந்தாலும், பிச்சுமணியின் குடும்பத்தின் அனைத்து தரவுகளையும் வாங்கிக் கொண்டு “தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்ற பயமுறுத்தல் கலந்த அறிவுறுத்தலோடு அனுப்பப்பட்டனர்.

காணாமல் போன சந்தீப்பின் நிலை குறித்து சஞ்சல மனத்துடன் பிச்சுமணி குடும்பத்தினர் மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக சொந்த ஊர் திருச்சி திரும்ப காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் வழியெங்கும் போலீஸ் சோதனை.

அங்கங்கு காரை நிறுத்தி உடைமைகளை திறந்து, சஷ்டி அப்த பூர்த்தி பத்திரிக்கை மற்றும் தங்கும் விடுதி ரசீதுகளை காண்பித்து போலீஸின் தீவிர சோதனையில் இருந்து ஒவ்வொரு ஊராக மீண்டு கொண்டிருந்தனர்.

வழியில் பல கருப்பு கார்கள் வேகமாக இவர்களை தாண்டி சென்றன. தஞ்சாவூர் திருச்சி தேசிய சாலையில் ஒரு கருப்பு கார் கரடு முரடாக வேகத் தடைகளை தாண்டி செல்ல முற்பட்டது போலீஸ் சோதனை சாவடியருகில்.

காரின் முன் சீட்டில் பிச்சுமணியின் மடியில் அமர்ந்திருந்த பேரன் ஆரூரன், “அதோ! அந்த காருக்கடியில்தான் பந்தை எடுக்க ஓடினான் சந்தீப்!” என்றான் சற்று மழலை மொழியில்.

பிச்சுமணிக்கு சரிவர காது கேட்காததால் அவர் மனைவி ஜெயா பேரன் சொன்னதை சற்று உரத்த குரலில் செவிபெயர்த்தாள்.

“எப்படிடா! உனக்கு தெரியும்?” என்று ஜெயா பேரனை கேட்டார்.

“கார் பின்னாடி ஸ்பைடர்மேன் ஸ்டிக்கர்” என்று பேரன் சொன்னான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்குபோதே போலீஸ் சோதனைக்கு கார் நிறுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

அப்போது காரிலிருந்து இரு ஆண்கள் தலைதெறிக்க ஆளுக்கொரு திசையில் ஓட, போலீசார் புரியாது திகைத்தனர்.

பிச்சுமணி பேரனை தூக்கிக் கொண்டு கருப்பு காரை நோக்கி விரைந்து பின் சீட்டை பார்த்தார்.

இரு பெண்கள் இடையில் கையில் மஞ்சள் குஷன் ஸ்பான்ஜ் பந்துடன் கண்களில் திகில் கலந்த, அறையப்பட்ட அறைகளால் கன்னம் வீங்கிய மராட்டிய மகன் சந்தீப்!

“நான் ஒருதடவை காருக்கு அடியில் பந்தை எடுத்து வரும்போது, காரின் பின்னாடி ஸ்பைடர்மேன் ஸ்டிக்கரை பார்த்தேன்” என்று பாட்டியை அதிர வைத்தான் பேரன்!

எப்போது பார்த்தாலும் ஸ்பைடர்மேன் ஸ்டிக்கராக வாங்கி தள்ளும் பேரனை எண்ணி அலுத்துக் கொள்ளும் பாட்டி, இந்த முறை வித்தியாசமாக பெருமையுடன் பேரனை உச்சி முகர்ந்தாள்.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.