குலதெய்வத்திற்குத் தீபவழிபாடு

ஒவ்வொருவரும் குலதெய்வதை வழிபடாமல் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது.

குலதெய்வம் குளிர்ந்தால்தான் குடும்பக் காரியங்கள் குறைவில்லாமல் நடக்கும். குலதெய்வம் மகிழ விளக்கெண்ணெய் தீபமேற்றித் தினமும் வழிபட வேண்டும்.

போரில் வெற்றி பெறுவதற்காகக் குலதெய்வத்தை மகிழ்விக்க எண்ணம் கொண்டான் துரியோதனன்.

கண்ணனிடம் அதற்காக வழி கேட்டால் அவன் தோற்றுப் போகத்தான் வழி சொல்லுவான் என்று எண்ணி நியாயம் தவறாத சகாதேவனிடம் கேட்டான் துரியோதனன்.

“அமாவாசை அன்று குலதெய்வத்தை விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வெற்றி நிச்சயம்” என்று சகாதேவன் கூறினான்.

சகுனியும் துரியோதனனும் அமாவாசை அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.

விஷயமறிந்த கண்ணன் அமாவாசைக்கு ஒருநாள் முன்பு ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தான். அதைக் கண்டு மற்றவர்களும் தர்ப்பணம் தர சூரியனும், சந்திரனும் இறங்கி வந்து காரணம் கேட்டனர்.

அதற்குக் கண்ணன் “நீங்கள் இருவரும் சேர்வதே அமாவாசை. இப்போது சேர்ந்திருப்பதால் இன்றுதான் அமாவாசை” என்று கூறினான். பஞ்சபாண்டவர்கள் அன்றே விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்தனர்.

அப்போது அங்கே தோன்றிய குலதேவதை மகிழ்ந்து கண்ணனிடம் “நீ எந்தப் பக்கம் இருக்கிறாயோ அந்தப் பக்கம் வெற்றி நிச்சயம்” என்று ஆசி தந்து மறைந்தது.

ஆனால் துரியோதனன் கண்ணன் தன்னை முட்டாளாக்கவே இதைச் செய்ததாக நினைத்து மறுநாள் குறிப்பிட்டபடி, குலதேவதை பூஜை செய்தான். அது அமாவாசைக்கு மறுநாளாக ஆனதால் பூஜை பலனற்றுப் போயிற்று.

இருப்பினும் ‘குலதேவதைக்குத் தெரியதா கண்ணனின் சூழ்ச்சி? ஏன் துரியோதனனுக்கு வெற்றி கிட்டவில்லை?’ என்ற கேள்வி தோன்றுகிறது.

இதற்குக் காரணம் அருந்ததி தேவி கூறியபடி, பஞ்சபாண்டவர் தினமும் விளக்கெண்ணெய் தீபமேற்றிக் குலதேவதையை வழிபட்டனர். அதனால் குலதேவதை மகிழ்ந்தது.

துரியோதனனோ போருக்கு முன் மட்டும் பூஜை செய்து வழிபட நினைத்தான். அதனால்தான் அவன் வெற்றி பெறவில்லை.

துரியோதனன் தினமும் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றிக் குலதெய்வத்தை வழிபட்டிருந்தால் பாரதப்போரின் கதையே மாறியிருக்குமோ?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.