ஆண்டாண்டு காலமாய்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
பாரம் சுமக்கிறான்
அம்முதியவன்!
சந்ததிகளின்
பல
பெரும்பவனிகள்
உருவாகின்றன!
இளைஞன் என்று
சொல்லிக் கொண்டு
கைகளை நீட்டித் தலையில்
சத்தியம் செய்தவன்
சுமைகளை ஏற்றி விடுகிறான்!
அவன் பொய்களை
விழுங்கியவன் போல்
விகாரமாய்க் காட்சியளிக்கிறான்!
பிறர் தாகங்களைத்
தணித்து விட எண்ணியவன்
தலையில் இடி விழுகிறது!
குளிர் நிழல்களைக் கூறுபோட
மண்ணைக் கீறுபவனும்
பறவைகளை விரட்டி விட்டு
அதன்
எச்சங்களைத் துடைப்பவனும்
முதியவனை
ஒதுக்கி விடுகின்றனர்!
அச்சாணி முறிகிறது!
முறிந்த பின்னும்
தொடர்கின்றன பிறவிகள்
உடன்
புதிய வண்டிகளும்
புதிய சுமைகளும்!
எஸ்.மகேஸ்
சென்னை
கைபேசி: 9841708284