தமிழின் சிறப்புகள் – புதுப்பா

பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது

கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது

பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!

காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை

தொன்மையாற்றில் நீந்திப் பாருக்கறந்தந்த வழி புதுமை

முச்சங்கங்கண்டு கற்கண்டாய் இலக்கிய இமயங்கொண்ட அமுதே வாழி!

பூங்குன்றனின் ஓரடிப் பாவிலே உலகை எங்கள் உறவாக்கினாய்

வள்ளுவத்தின் வழியே நல்வாழ்வை ஈரடியில் பொதுமறையாக்கினாய்

சிலம்பிலே தெய்வத் தமிழச்சியின் அறங்கூறி மறங்காட்டினாய்

உலையா நெஞ்சுரத்தைத் தமிழர்க்குப் புரட்சிப் பாக்களினால் ஊட்டினாய்

செம்மாந்தர் செப்பிய முன்மொழியாய் எங்கட்கு வலுவூட்டினாய்

ஞாலத்தின் வேர்மொழியே! நற்றமிழ்ச்சீர் மொழியே! வாழிய வாழியவே!!

பாவலர் கவிமாமணி நா.கனகராஜ்
வத்திறாயிருப்பு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.