துப்பறியும் கண்டக்டர்!

1990களில், தமிழ்நாடெங்கும் தங்க ரதம் போல ‘திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ்‘ பஸ்கள் போக்குவரத்தில் கோலோச்சின.

அனைத்து பஸ்களும் ஒரே மாதிரி இருந்ததால், பஸ் முன்னாலும் பின்னாலும் உள்ள அறிவிப்பு பலகையை சரியாக பார்த்துக்கொண்டு ஏற வேண்டும்.

பின்னாளில் வடிவேல் ஒருதிரைப்படத்தில் கண்டக்டராக, இது போன்ற ஒரே நிறம் உடைய பஸ்கள் ஒன்றில் தவறுதலாக ஏறி தர்ம அடி வாங்கி, அனைவரையும் அற்புத நகைச்சுவையில் ஆழ்த்தியிருப்பார்.

ஒருநாள் மதியம் இரண்டு மணி அளவில் ஒரு திருவள்ளுவர் பஸ்ஸில் சூட்கேஸ் நிறைய நகைகள், பட்டுப்புடவைகள் மற்றும் வீட்டுமனை விற்ற பணத்துடன் ஒரு தம்பதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பஸ்ஸில் ஏறினர்.

அந்தக் காலத்தில் பேங்க் லாக்கர்கள் அவ்வளவு பிரபலம் இல்லை. திருட்டுக்களும் அவ்வளவாக இல்லை.

பஸ்ஸில் இருக்கையில் தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் இருப்பிடத்தில் பெட்டியை வைத்தனர்.

அவர்கள் வீட்டு வேலைக்காரி மூலம் இதனை அறிந்த திருடன் ஒருவன், அதே பஸ்ஸில் ஏறி அந்த தம்பதிக்கு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான். தம்பதி எந்த ஊர் செல்கின்றனர் என்பது திருடனுக்குத் தெரியாது.

திருடன் ஒருமகா கஞ்சப் பேர்வழி. எனவே முதலில் திருடன் செங்கல்பட்டு வரை டிக்கட் எடுத்தான். செங்கல்பட்டில் தம்பதி இறங்கவில்லை. திருடன் திண்டிவனம் வரை டிக்கட் எடுத்தான்.

அப்போதெல்லாம் மாமண்டூரில் டிரங்க் ரோட்டில் இருந்த ஒருசாதாரண ஹோட்டல் சுவையான மலிவான டிபன்களுக்கு மிகவும் புகழ் பெற்றது.

எந்தவித அரசியல் நிர்ப்பந்தமின்றி ஹோட்டலில் சுவையான பதார்த்தங்களுக்காகவே, அனைத்து பஸ் பயணிகளும் எந்தவித சலுகைகளின்றி, அந்த ஹோட்டலில் உணவருந்தி ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடருவர்.

இப்போது போல தனி ஒருவன் ஹோட்டலுக்குள் நுழைய ஆயிரம் ரூபாயெல்லாம் தேவைப்படாது.

அந்த தம்பதி மாமண்டூரில் இறங்கி உணவு அருந்துவர், அப்போது சூட்கேஸ் பெட்டியை களவாடி விடலாம் என்று திருடன் நினைத்தான்.

அவர்களும் திருடன் எதிர்பார்த்தது போலவே மாமண்டூரில் டிபன் சாப்பிட இறங்கினர். ஆனால் சர்வ ஜாக்கிரதையாக சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டு இறங்கினர்.

வேறு வழியின்றி திருடன் விழுப்புரம் வரை டிக்கட் எடுத்தான். தம்பதி உறங்காமல் கண்ணும் கருத்துமாக தலைக்கு மேலே இருக்கும் தங்கள் பெட்டியை அவ்வப்போது பார்த்தபடி கண்காணித்துக் கொண்டே வந்தனர்.

திருடன் எதிர்பார்த்தது போலவே விழுப்புரம் வந்தும் தம்பதி இறங்காததால், திருடன் பெரம்பலூர் வரை டிக்கட் எடுத்தான்.

இருட்டத் தொடங்கியது.

பஸ் பெரம்பலூர் வந்தபோது அயர்ச்சியில் தம்பதி சற்று தூங்கி விட்டனர். அவர்கள் மீண்டும் கண் விழித்தபோது, பஸ் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை கன்னியாகுமரி ரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கண் விழித்த தம்பதி, பெட்டியை காணாது, அலறி கூச்சலிட்டனர். பஸ் நிறுத்தப்பட்டது.

சற்று நேர கூச்சல் குழப்பத்திற்கு பிறகு, தம்பதியின் பின் சீட்டில் இருந்த நபரைக் காணவில்லை என்பதால், கண்டக்டர் டிரைவரிடம் அந்த நபர் ஒவ்வொரு ஊர் வந்தவுடன் மீண்டும் அடுத்த ஊர் வரை டிக்கட் எடுத்து பயணம் செய்ததை கூறினார்.

கண்டக்டரும் டிரைவரும் திருட்டு அநேகமாக பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில் தான் நடந்திருக்கும் என நினைத்து ஒரு திட்டம் தீட்டினர்.

திருடன் சென்னை என்பதால், சென்னை செல்லும் பஸ்ஸை பார்த்தவுடன் கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினான். கதவு சாத்தப்பட்டது.

அவன் கையில் இருந்த பெட்டி பிடுங்கப்பட்டது. தர்ம அடிகள் விழுந்தன. அவன் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் பஸ் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.

போலீஸ் விசாரணையில், கண்டக்டர் நடந்ததைக்கூறி, “சார்! திருட்டு பெரம்பலூரில் நடந்தது என்பதாலும் திருடன் சென்னையிலிருந்து ஒவ்வொரு ஊராக டிக்கட் எடுத்து வந்ததாலும், திருடனின் சொந்த ஊர் சென்னையாக இருக்கும் என்று அனுமானித்தோம்.

அநேகமாக சென்னை செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருப்பான் என நினைத்து, பஸ்ஸின் முகப்பில் உள்ள அறிவிப்பு பலகையை “கன்னியாகுமரி டு சென்னை” என்று மாற்றி, சென்னைக்கு செல்லும் பஸ் போல மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோம்.

திருடனும் சென்னை பஸ் வந்துவிட்டது என்று ஆசையுடன் ஏறி எங்களிடம் மாட்டிக்கொண்டான்” என்று சொல்லி முடித்தார்.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.