படியில் பயணம் நொடியில் மரணம்!

வீட்டிலிருந்து கல்லூரிக்கு விரைவாக கிளம்பி கொண்டிருந்தான் ராம்.

கண்ணாடியின் முன் நின்று தலையை சீவி பின்பு அதனை கலைத்துவிட்டு, அவன் முகத்தை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

கழுத்தில் அழகான ஒரு வெள்ளி செயின், கையில் ஒரு காப்பு போட்டிருந்தான். அவன் பிறந்த நாளைக்கு அந்த செயின் ரமேஷ் அவனுக்கு பரிசாக கொடுத்தது.

அம்மா சமையல் அறைக்குள் இருந்து அவனை அழைத்தார்!

“வாடா ராம் சாப்பிட! எனக்கு வேலைக்கு நேரமாச்சு”

“இந்தா வர்றேன் மா!”

தட்டில் ஆவி பறக்க இட்டிலியும் தேங்காய் சட்னியும் இருந்தது. அதனை சாப்பிட்டுவிட்டு உடனடியாக புளியங்குளம் பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான்.

நரிக்குடியில் இருந்து அந்த பேருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. புளியங்குளம் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது.

புளியங்குளத்தில் சில நபர்கள் இறங்கினார்கள். ரமேஷ் பேருந்தில் ஏறினான். படிக்கட்டு பக்கத்தில் நின்று பயணித்துக் கொண்டிருந்தான்.

கண்டெக்டர் “உள்ளே வாங்கடா! இல்லேன்னா இறங்கி போங்கடா!” என்று வசைபாடிக் கொண்டிருந்தார்.

ராம் அவன் நண்பர்களுடன் பேருந்தில் பேசிக்கொண்டே படிக்கட்டில் நின்று கொண்டு வந்தான். நடத்துனர் சொன்ன வார்த்தைக்கு ராம் செவி சாய்க்கவே இல்லை.

டிரைவர் படியில் தொங்கும் ராமை தன்னுடைய இடது பக்க கண்ணாடியில் பார்த்து திட்டிக் கொண்டே இருந்தார். அது அவன் காதில் கேட்டது.

“உங்க வேலைய பாருங்க. எனக்குத் தெரியும்!” என்று திமிராகப் பேசினான்.

டிரைவர் அவனுடைய பேச்சை கண்டு கொள்ளவில்லை.

ஒருவழியாக பேருந்து திருச்சுழி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது. அங்கேயும் சில பேர்கள் இறங்கினார்கள். சில பேர்கள் ஏறினார்கள்.

கண்டெக்டர் எல்லோரையும் “உள்ள வாங்கம்மா! உள்ள வாங்கடா! உள்ள வாங்கடா! ஏன்டா? இப்படி உசுர வாங்குறீங்க!” என்று வசைப்பாடிக்கொண்டே இருந்தார்.

ராம் பேருந்தின் முன்புறப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.

அவனுடைய தலைமுடியை கையால் கோதி விட்டு ‘மற்ற பெண்கள் பார்ப்பார்களா?’ என்று ஒருபுறம் எண்ணியபடி மற்ற பெண்பிள்ளைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

தமிழ்பாடியின் வளைவில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, ராம் கை வழுக்கி கீழே விழுந்து பேருந்தின் பின்புற டயர் அவன் மேல் ஏறி, அவனுடைய உயிர் அங்கேயே பிரிந்து உடல் சிதைந்து போனது. பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. அவனுடைய தாய்க்கு நண்பர்களால் தகவல் கொடுக்கப்பட்டது. நண்பர்கள் கண்கலங்கி நின்று கொண்டிருந்தார்கள்.

அவனுடைய சடலம் அருப்புக்கோட்டை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமின் சிகை அலங்காரம் சிதைந்து போனது!

முக அலங்காரம் மறைந்து போனது!

உயிர் பிரிந்து போனது!

மறுநாள் காலையில் நரிக்குடியில் இருந்து அந்த பேருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தின் படிக்கட்டின் அருகில் “படியில் பயணம் நொடியில் மரணம்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.