பொறுப்பு – எம்.மனோஜ் குமார்

தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ராஜேஷ் தன் மகனை அழைத்துக் கொண்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச ஆரம்பித்தான்.

“என் பையனுக்கு படிப்பை தவிர வேற என்ன திறமை இருக்கு என்கிறதை கண்டுபிடிச்சி, அதை வெளிக்கொண்டு வருவீங்களா?”

ராஜேஷ் தலைமை ஆசிரியரிடம் கேள்வி கேட்க, அவர் திகைத்துப் போனார்.

“ஏன் அப்பிடி கேட்டீங்க?” தலைமை ஆசிரியர் ஆச்சரியமாகக் கேட்டார்.

“என் பையன் சுமாரா தான் படிப்பான். அவன்கிட்ட வேற ஏதாச்சும் திறமை இருக்கான்னு என்னால கண்டுபிடிக்க முடியல. ஒருவேள அப்பிடி ஏதாச்சும் திறமை இருந்தா, அதுல ஆர்வம் காட்டி அதுல ஊக்கப்படுத்தி படிக்க வெச்சா, அவன் எதிர்காலம் நல்லா இருக்கும்” ராஜேஷ் பதிலளித்தான்.

“சார்! உங்களை மாதிரி ஒரு அப்பா கிடைக்க உங்க பையன் கொடுத்து வெச்சிருக்கணும். மத்த பெத்தவங்க அவங்க விருப்பத்துக்குத்தான் புள்ளைங்கள படிக்க வைக்க ஆசைப்படுவாங்க. புள்ளைங்க ஆர்வத்த கேக்கிறதில்ல.

ஆனா, நீங்க தான் புள்ளைக்கு எதுல ஆர்வம் இருக்கோ, அந்த படிப்ப குடுக்கணும்னு ஆசப்படுறீங்க. இப்படி பெத்தவங்க எல்லாரும் பொறுப்போடு இருந்தா, குழந்தைங்க எல்லாரும் வாழ்க்கையில நல்லா முன்னேறுவாங்க!”

தன் மகன் ஆர்வத்தின் மீது இருந்த ராஜேஷின் அக்கறையைப் பார்த்து வியந்து, அவனைப் பாராட்டினார் தலைமை ஆசிரியர்.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.