தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஒண்ணாந்தான் நாளையிலே
ஒசந்த செவ்வா கிழமையிலே
ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து
ஓடும் பிள்ளை தொண்டலிட்டு
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
வாங்கியாந்த முத்துகளை
வாளியிலே ஊற வச்சி
கம்மந்தட்டை இரண்டெடுத்து
கணுக்கணுவா முறிச்சி வச்சி
சோளத்தட்டை இரெண்டெடுத்து
சுளை சுளையா முறிச்சி வச்சி
மாட்டாந்தொழு தெறந்து
மாட்டெருவு அள்ளி வந்து
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஆட்டாந்தொழு தெறந்து
ஆட்டெருவு அள்ளி வந்து
கடுகுலயுஞ் சிறுபயிறு
காராமணிப் பயிறு
மிளகுளயுஞ் சிறுபயிறு
முத்தான மணிப்பயிறு
மொள போட்ட ஒண்ணா நாளு
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஓரெலையாம் முளைப்பாரி
ஓரெலைக்குங் காப்புக்கட்டி
ஒரு பானை பொங்கலிட்டு
முளைப்பாரி போடுங்கம்மா
தன்னா னன்னே போடுங்கம்மா
தையலாரே ஒரு குலவை
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
கிராமத்து திருவிழாக்களில் முளைப்பாரி ஊர்வலம் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்.
அந்த முளைப்பாரி ஊர்வலம் முடிந்ததும், கோவிலில் முளைப்பாரியை நடுவில் வைத்து, பெண்கள் சுற்றி நின்று கும்மி அடிக்கும்போது பாடும் பாடலின் ஒரு பகுதியே இந்த பாடல்.
இது நாட்டுப்புறப் பாடல் வகையைச் சார்ந்த பாடல்.