பக்குவம் – கதை

மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி அரங்கத்தில் மேலாளர் கணேஷை சந்திக்க வந்திருந்தார் பெண் மருத்துவரான பவானி.

“சார்! நேத்து ராத்திரி நடந்த ஒரு நிகழ்ச்சியில என் பர்ச, இங்க எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன். அதுல ஐ.டி கார்டு, பணம், ஏ.டி.எம் கார்டு எல்லாமே இருந்துச்சு” கவலை படிய சொன்னார் பவானி.

“கவலைப்படாதீங்க! அரங்கத்தை கூட்டுறதுக்கு ஒரு ஆயா இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாங்க. வெயிட் பண்ணுங்க. அவங்க வந்ததும், கூட்டச் சொல்லுவோம். கூட நின்னு உங்க பர்ஸ் கிடைச்சா வாங்கிட்டு போங்க!” பணிவாய் சொன்னான் கணேஷ்

“இல்லைங்க! எனக்கு அவசரமா ஹாஸ்பிடல் போகணும். நிறைய பேஷன்ட்ஸ்களை பாக்கணும். நீங்களே தேடி கண்டுபிடிச் சிட்டு என்ன கூப்பிடுங்க! நான் நேரம் கிடைக்கும்போது வந்து வாங்கிக்கிறேன்” அவசரப்படுத்தினார் பவானி.

“சாரிங்க! அப்படி எல்லாம் பண்ண முடியாது. உங்களுக்கு பர்ஸ் வேணும்னா பொறுமையா, ஆயா கூட்டுறப்போ கூடவே இருந்து பார்த்து எடுத்துக்கோங்க” என்று கணேஷ் கூறியத்தைக் கேட்ட பவானி கடுப்பானாள். வேறு வழியின்றி காத்திருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம், ஆயா வந்து அரங்கை கூட்டும்போது கூடவே பவானியும் நின்று இருந்தாள். ஒரு இருக்கையின் அடியில், பர்ஸ் கிடைக்கவே முகம் மலர்ந்து எடுத்துக் கொண்டாள்.

“நான் ஏன் உங்கள வெயிட் பண்ண சொன்னேன் தெரியுமா..? நீங்க சொன்னது மாதிரி பர்ச நாங்க தேடிக்கொண்டிருக்கும் போது, யாராவது ஏற்கனவே பர்சை பார்த்து அதில் இருக்கிற பணத்தை எடுத்துட்டு, வெறும் பர்சை போட்டு இருந்தா, அதை நாங்க எடுத்துக் கொடுத்தா, அதுல இருந்த பணத்தை நாங்க தான் எடுத்தோம்ன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். அப்படி வரக்கூடாதுன்னுதான் நீங்களே கூட இருந்து பர்ச எடுத்துக்க சொன்னேன்” என்று கணேஷ் கூறியதைக் கேட்ட பவானிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

கணேசனின் நேர்மை கண்டு பெருமைப்பட்டு புன்னகைத்தபடியே புறப்பட்டார் டாக்டர் பவானி.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.