வலி – எம்.மனோஜ் குமார்

“நரேன்! நீ தொழில் தொடங்கினப்போ வாங்கின ஐம்பதாயிரம் பணத்தை எப்போ தரப்போற?” கேட்டான் சுரேஷ்.

“சீக்கிரமே தரேன்!” என்று சமாளித்தான் நரேன்.

“நரேன்! நான் இப்போ ரொம்ப கஷ்டத்தில இருக்கேன். என் குடும்பத்த நான் காப்பாத்தணும் பணத்த குடு” என்று கெஞ்சினான் சுரேஷ்.

“நான் அப்புறமா பேசுறேன்” என்று கூறி தொடர்பை துண்டித்தான் நரேன்.

கேட்ட பணத்தையும் திருப்பி கொடுக்காமல், சுரேஷை ஏமாற்ற முடிவு செய்து அவனை அலைக்கழித்தான்.

சுரேஷ் நடந்து நடந்து தளர்ந்து பிறகு கேட்பதை நிறுத்தினான். இருந்தாலும் ‘நண்பனாக இருந்து ஏமாற்றிவிட்டானே’ என்ற வலி அவன் மனதில் இருந்தது.

ஒரு வருடம் ஓடிபோனது.

திடீரென்று ஐம்பதாயிரம் பணத்தோடு சுரேஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நரேன்.

சுரேஷ் ஆச்சரியத்தில் முகம் மலர்ந்தான்.

“என்ன மன்னிச்சிடு சுரேஷ், நீ அப்பாவின்னு நினைச்சு உன்ன ஏமாத்திட்டேன். ஆனா கடவுள் என்ன வேற ரூபத்தில ஏமாத்தியிட்டாரு. என் மகன் வெளிநாடு போக ஆசப்பட்டு ஒருத்தன்கிட்ட ரெண்டு லட்சம் குடுத்து ஏமாந்துட்டோம். அப்ப எனக்கு ஏற்பட்ட வலி இன்னும் என்ன விட்டு போகல. இதே வலிதானே நான் பணம் தராம ஏமாத்துனபோ உனக்கு வந்திருக்கும். அதான் பணத்தோட வந்தேன்.” சொல்லிவிட்டு திரும்பிய நண்பனை பரிவோடு பார்த்தான் சுரேஷ்.

எம்.மனோஜ் குமார்

One Reply to “வலி – எம்.மனோஜ் குமார்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.