ஆலு பரோட்டா என்பது கோதுமை மாவில் தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும்.
உருளைக்கிழங்கு மசாலா வைத்து செய்யப்படுவதால் இதற்கு தொட்டுக்கறி ஏதும் தேவை இல்லை.
சுவையான ஆலு பரோட்டா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – கால் படி (1 பங்கு)
பால் – 25 மில்லி லிட்டர்
உப்பு – தேவையான அளவு
மசால் தயார் செய்ய
உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
நாட்டுத் தக்காளி – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
கொத்தமல்லி இலை – 3 கொத்து
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்)
மசால் பொடி – 1½ ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ¾ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
சீரகம் – ¾ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
ஆலு பரோட்டா செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும்.
பெரிய வெங்காயம் நாட்டுத் தக்காளி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து, அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை வேக வைத்து தோல் உரித்து, தேவையான உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, பாலை ஊற்றி ஒரு சேரக் கிளறிக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான உப்பு, இரண்டு ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து தளர்த்தியாக திரட்டி ½ மணி நேரம் வைத்திருந்து, சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி கரைந்ததும் நறுக்கிய மல்லிஇலையை சேர்த்து ஒருநிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து இருநிமிடங்கள் வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்
கலவையுடன் மஞ்சள் பொடி, மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
மசால் வாடை மாறியதும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கினைச் சேர்த்து ஒருசேரக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
கலவை ஆறியதும் படத்தில் காட்டியவாறு உருட்டிக் கொள்ளவும்.
கோதுமை மாவு உருண்டையை கோதுமை மாவினைக் கொண்டு சப்பாத்தியாக படத்தில் காட்டியவாறு விரித்துக் கொள்ளவும்.
விரித்த சப்பாத்தி மாவின் நடுவில், மசாலா உருண்டையை வைத்து, சுற்றி உள்ள கோதுமை மாவினை, படத்தில் காட்டியவாறு கொசுவம் வைத்து மடித்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.
பின்னர் இவ்வுருண்டையை மெதுவாக சப்பாத்தியாக விரித்துக் கொள்ளவும்.
சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு எண்ணெய்விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
சுவையான ஆலு பரோட்டா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் புதினா இலையையும் பொடியாக நறுக்கி பரோட்டா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!