அனைத்தும் ஆகின்றானே! – தா.வ.சாரதி

படவரவில் அறிதுயில் கொண்டு்
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே…

கிடந்த மா அரங்கின் உள்ளே
நெடியனாய் திருக்கோவலூரில்
உருவம் கொண்ட பெருமையாளன் – என்
மனத்தினுள்ளே உறைகின்றானே…

பல் தொண்டு மலை வந்த மாலன்
குடி புகுந்து அருளும் வாசன் – என்
நெஞ்சின் உள்ளே நிற்கின்றானே…

தஞ்சமாக அடைந்தவர்க்குத்
தன்னையே தந்த வள்ளல்
தங்கினான் என் மனத்திடமே – எனைத்
தாங்குகிறான் தார் மாலையானே…

மார் பிளந்த திருமார்வனவன்
இரு வேறு உருவம் கொண்டு – என்
மனத்திடையே மறைந்துள்ளானே…

ஏழு அடர்த்த இராமனவன்
வில் வளைத்த ரூபனவன்
வல்லரக்கன் முடிகொய்ந்த நாதனவன் – என்
வாழ்வில் அனைத்தும் ஆகின்றானே…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.