மானம் மறைப்பது அழகே!

ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.

நிறுவனத்தின் முதலாளி முகேஷ்க்கு, அவள் புடவை கட்டி வந்தது எரிச்சலைத் தந்தது.

‘எல்லோரும் பார்மல் டிரஸ் அணிந்து வரும்போது, இவள் மட்டும் ஏன் புடவை கட்டி வருகிறாள்?’ என்று எண்ணியபடி விமலாவை தனது அறைக்கு அழைத்தார் முகேஷ்.

“ஏன் புடவை கட்டிட்டு வர்ற? அசிங்கமா இருக்கு. லுக்! இது பெரிய இன்டர்நேஷனல் கம்பெனி. நாளையிலிருந்து நீ பார்மல் காஸ்ட்யூமைத் தான் போட்டுட்டு வரணும்” முகத்தை கடுப்பாக்கிவிட்டு, விமலாவிடம் நிபந்தனை போட்டார் முகேஷ்.

“சார்! எனக்கு ஷர்ட், பேண்ட், கவுன், குர்தி இந்த மாதிரி மேற்கத்திய பார்மல் டிரஸ் அணிய எனக்கு சுத்தமா பிடிக்கல. எனக்கு புடவை தான் கட்ட பிடிச்சிருக்கு. இது நம்ம இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்குது” விமலா அவர் கண்களை பார்த்துப் பதிலளித்தாள்

“நீ எதுவும் பேசாத! நாளையிலிருந்து நீ ஆபீஸ்க்கு பார்மல் டிரஸ் தான் போடுற. ஒருவேள அப்பிடி போடாம உன் இஷ்டத்துக்கு புடவ தான் கட்டிகிட்டு வந்தா, உன் மேல நான் சீரியசா ஆக்‌ஷன் எடுக்க வேண்டியதிருக்கும். ஓகே!” முகேஷ் முகத்தை ‘உர்’ என்று வைத்துக் கொண்டு கண்டிப்புடன் சொன்னார்.

அவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை தைரியம் வந்ததோ தெரியவில்லை? அடுத்த நாளும், விமலா புடவை அணிந்துதான் அலுவலகம் வந்தாள்.

இதைப் பார்த்த, முகேஷிற்கு மூக்கு வியர்த்தது. ஆத்திரம் வந்தது. அடுத்த நொடி, அவள் அவர் அறைக்கு வரவழைக்கப்பட்டாள்.

“ஒரு தடவை சொன்னா புரியாதா? முட்டாளா நீ? நேத்தே சொன்னேன் புடவை காட்டாதேன்னு. சொன்ன பேச்ச கேட்காம ஏன் புடவை கட்டிட்டு வந்த?

ஒண்ணு பண்ணு நீ வீட்டில இரு. அங்க இருந்துட்டு முறை வாசல் பண்றது, கோலம் போடுறது, வீட்டை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்றது, துடைக்கிறது, பாத்திரம் எல்லாம் தேச்சி கழுவறது. இந்த மாதிரி வேலை செய்.

அப்போ நீ வேலைக்கு வரத் தேவை இல்லை. இந்த மாதிரி புடவை கட்டிகிட்டு வர்றதா இருந்தா, நீ நாளையிலிருந்து ஆபீஸ்க்கு வரவேண்டாம்”முகேஷ் கோபத்தில் கன்னாபின்னாவென்று திட்டினார்

“சார்! டிரஸுக்கும், வேலைக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? எந்த சம்மந்தமும் இல்லை. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? டிரஸ் போடுறது அவங்கவங்க விருப்பம். நீங்க ஒரு தனி மனிதனோட சுதந்திரத்தை கெடுத்து, அவங்க மேல ஒரு விஷயத்தை திணிக்கிறது ரொம்ப தப்பு. நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க!” விமலாவும் நேருக்கு நேராக எரிந்து விழுந்தாள்.

“ஓஹோ! எனக்கே புத்திமதி சொல்றியா? என்கிட்டயே ரூல்ஸ் பேசுறியா? நாளையிலிருந்து நீ எப்படி வேலைக்கு வர்ரேன்னு நானும் பார்க்கிறேன்”

அடுத்த நாள் விமலா அலுவுலகத்திற்கு வந்தபோது, புடவை தான் அணிந்திருந்தாள். புடவை கட்டி வந்தால் தனது வேலை பறி போகும் என்று தெளிவாகத் தெரிந்து இருந்தும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் புடவையே கட்டி வந்தாள்.

அவள் அலுவலக கேட்டருகே வந்து, கம்பெனிக்குள் நுழைய முடியாமல், அந்த தனியார் நிறுவனத்தின் வாசலில் செக்யூரிட்டியால் தடுத்து நிறுத்தப்பட்டாள்.

“ஏன் என்னை ஆபீஸ்க்குள்ள நுழைய விடாம தடுக்கிறீங்க? என்ன பிரச்சனை?” விமலா செக்யூரிட்டியை உரிமையோடு கேட்டாள்

“முதலாளி ஐயா தாம்மா புடவை கட்டிகிட்டு வர்றவங்களை, ஆபீஸ்குள்ள நுழையவிடாதேன்னு ஸ்ட்ரிக்டா சொன்னாரு. அதனால தான்மா தடுத்தேன்” செக்யூரிட்டி தாழ்மையாகப் பதிலளித்தார்.

அப்பொழுது முதலாளி முகேஷ் காரில் வர, செக்யூரிட்டி கேட்டை அகலமாகத் திறந்து வைத்து, கார் உள்ளே வர ஏற்பாடு செய்தார். விமலா கார் டிரைவர் எதிர் சீட்டுக்கு வந்து நின்றாள். கார் கண்ணாடி இறங்கியது

“சார்! செக்யூரிட்டி உள்ள விட மாட்டேங்குறாரு” அவள் பணிவாகச் சொன்னாள்

“நான் தான் செக்யூரிட்டி கிட்ட சொல்லி, உன்னை உள்ள விடக்கூடாதுன்னு சொன்னேன். நீ புடவை கட்டிட்டு வர்றதா இருந்தா, நான் உன்னை ஆபீஸ்குள்ள நுழைய விடமாட்டேன்” முகேஷ் கறாராகக் சொன்னார்.

“சார்! என் மேல எதுக்கு இவ்வளவு கொலைவெறி? நான் தான் முதல் நாளே புடவை தான் கட்டுவேன்னு சொன்னேன். நீங்க கேட்க மாட்டேங்கிறீங்க.

நான் புடவை தான் கட்டுவேன். இது தான் எனக்கு பிடிச்சிருக்கு. இது நம்ம இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்குது.

வெளிநாட்டுகாரன் கூட நம்ம ஊரு பாரம்பரிய ஆடைகளான வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை உடுத்துறான். வெளிநாட்டு பெண்கள் கூட புடவை கட்டுறாங்க. அவங்க நம்ம பாரம்பரியம், கலாச்சாரத்துக்கு மரியாதை தராங்க. நம்ம கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு, உலகத்தில எங்க போனாலும் ராஜ மரியாதை தராங்க.

ஆனா, நீங்க நம்ம நாட்டோட குடிமகனா இருந்துகிட்டு, நம்ம பாரம்பரிய ஆடைகளை வெறுக்கிறீங்க. நம்ம பாரம்பரியம், கலாச்சாரத்தை மறந்தது மட்டுமில்லாம, மோசமா எதிர்க்கவும் செய்றீங்க. உங்களை இந்த புண்ணிய பாரத நாட்டோட குடிமகன்னு சொல்லவே வெட்கமாவும், அருவருப்பாவும் இருக்கு. நீங்க ஒரு கம்பெனி முதலாளின்னு சொல்லிக்கவே வெட்கப்படுறேன்” விமலா கோபத்துடன் பேசினாள். அவள் தன்னை மறந்து முதலாளி என்று கூடப் பார்க்காமல் ஆவேசமாகப் பேசினாள்.

“அப்படியா? இது வேலைக்கு ஆகாது. நீ ரொம்ப ஓவரா பேசுற. இனிமே உனக்கு இங்க வேலை கிடையாது. நீ ஆபீஸ்க்கு வராத. உன்னை வேலைய விட்டு தூக்கிட்டேன். வண்டிய எடுப்பா, இவள வெளியே அனுப்பு” என்று செக்யூரிட்டியிடம் சொன்னார். கார் புறப்பட்டுப் போனது

முகேஷ் விமலாவை அவமானப்படுத்தி, வேலையை விட்டு நீக்கினதை நினைக்க நினைக்க விமலா கண்ணீரோடு வீட்டுக்கு நடந்தாள். அதன்பிறகு, அந்த அலுவலகத்திற்கு வருவதே இல்லை.

நாகர்கோவில் ஊரிலிருந்து, தெய்வானைப் பாட்டி முகேஷின் வீட்டிற்கு வந்தபோது, வீடு அலங்கோலமாய் இருந்தது. ‌

பாட்டி முகேஷின் பத்து வயது மகள் அணிந்திருந்த உடையைப் பார்த்து முகம் கோணினாள். அவள் முட்டுக்கு மேல், அரை அடி உயரத்தில் நிற்கும்படியான பெர்முடா அணிந்திருந்தது, தெய்வானையின் கண்களுக்கு அருவருப்பாக இருந்தது.

தெய்வானைப் பாட்டி, யாரிடமும் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வராமல் படுத்திருந்தாள்.

”என்ன பாட்டி வந்ததிலிருந்து பார்க்கிறேன். யார் கூடவும் முகம் குடுத்து பேசாம ரூமுக்குள்ள உட்கார்ந்துட்ட. என்னாச்சு பாட்டி?” கேட்டான் முகேஷ்.

“நீ என்கிட்ட பேசாத! உன் மேல நான் செம கடுப்புல இருக்கேன்”

“ஏன் பாட்டி? நான் உனக்கு என்ன தப்பு பண்ணினேன்”

“நீ தப்பு பண்ணலடா! உன் பொண்ணு போட்டிருக்குற டிரெஸ் எனக்கு சுத்தமா புடிக்கல. நீ அவள இந்த சின்ன வயசில கெடுத்து வெச்சிருக்கிற. அதுதான் எனக்கு தப்பா படுது”

“என்ன பாட்டி சொல்றீங்க?”

“ஆமாண்டா! உன் பொண்ணு போட்டு இருக்குற டிரஸ் பாத்தியா! ரொம்ப கேவலமா இருக்கு. இந்த வயசில, முளங்காலு மறைக்கிற அளவுக்கு பாவாடை உடுத்தணும். அவ அப்பிடி உடுத்தி இருக்காளா?” கோபமாகப் பேசிய தெய்வானைப் பாட்டியை ஆச்சரியமாகப் பார்த்தான் முகேஷ்.

“பாட்டி, அவளுக்கு இப்போ பத்து வயசு. இப்படி டிரஸ் பண்ணிக்காம,வேற எப்பிடி டிரஸ் பண்றது? அவ சின்னப் பொண்ணு. இங்க இந்த மாதிரி ஃபார்மல் டிரஸ் போடுறது சகஜம்தான்” கேட்ட தெய்வானையின் முகம் அஷ்ட கோணலாகியது.

“எதுடா பார்மல் டிரஸ்ஸு? பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அது மாதிரி அவ போடுற டிரஸ் முழுசா போர்த்திக்கிறது மாதிரி இருக்கணும். அது தான் நம்ம நாட்டோட கலாச்சாரம், பண்பாடு. நீ என்னடாண்னா அதை எல்லாத்தையும் கவனிக்காம, அவ இஷ்டத்துக்கு டிரஸ் பண்ண அனுமதிச்சிருக்கிற”

“பாட்டி, நீ இன்னும் பழைய காலத்து பாட்டியாவே இருக்கிற. காலம் மாறிப்போச்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி உடை அணிவது தான் வழக்கம்”

“என்னடா பெரிய காலமாற்றம்? என்னோட சொந்த ஊர் எதுன்னு தெரியுமா?

“தெரியும். நாகர்கோவில் பக்கம்”

“என்னோட பாட்டி காலத்துல, பெண்கள் மேலாடை அணிவதற்கு அவங்களுக்கு அனுமதி இல்ல. மானத்த மறைக்க அவங்கபட்ட வேதனை சொல்லி மாளாது.

பெண்கள் மேலாடை அணியக்கூடாதுன்னு சட்டம் இருந்த காலம். அவங்க 200 வருஷத்துக்கு முன்னாடி தோள் சீலைப் போராட்டம் நடத்தி, மேலாடை அணியும் உரிமைக்காக போராடி ஜெயிச்சாங்க.

இன்னைக்கு, அத எல்லாரும் காத்துல பறக்க விடுறாங்க. கண்டபடி உடை உடுத்துறாங்க. இது எனக்கு சுத்தமா பிடிக்கல!” தெய்வானை பாட்டி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, முகேஷ் ஒரு கணம் யோசித்தான்.

தனது பாட்டியின் மூதாதையர்கள் பட்ட வலிகளை, வேதனைகளை கேட்டபோது, அவன் மனம் இளகியது. அவன் அலமாரி திறந்து, மகளின் முழு உடலும் மறையும்படியான ஆடை எடுத்து, மகளிடம் அணிவிக்கச் சொன்னான்

அவள் அந்த ஆடை அணிந்து, தெய்வானைப் பாட்டியிடம் வந்தபோது பாட்டி முகம் சந்தோஷத்தில் பிரகாசமானது

அவனது நிறுவனத்தில் பணிபுரியும் விமலா கூட, புடவை கட்டித் தான் அலுவுலகம் வருவேன் என்று அடம் பிடித்தாள். அதற்காகவே அவளை வேலைக்கு வர வேண்டாம் என்று சத்தம் போட்டேன். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான் முகேஷ்.

மறுநாள் விமலாவின் வீட்டுக்கு புறப்பட்டான் முகேஷ். தனது வீட்டிற்கு திடுதிப்பென்று வந்த முதலாளி முகேஷ்சைப் பார்த்து, ஆச்சரியத்தில் முகம் மலர்ந்தாள் விமலா.

அவரது கையில் ஐந்து புடவைகள் கொண்ட பார்சல் இருந்தது. அதை விமலாவிடம் நீட்டிய போது அவள் ஆச்சரியப்பட்டு வாங்கி பிரித்துப் பார்த்த போது, உள்ளே இருந்த புடவைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

“என்ன மன்னிச்சிடும்மா! உன்ன பார்மல் டிரஸ் போடச் சொல்லி நான் கட்டாயப் படுத்தினேன். ஆனா, நீ புடவ தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்த. உன்ன நான் வேலைய விட்டே தூக்கிட்டேன். புடவை கட்டுற கலாச்சாரத்தைப் புரிஞ்சிக்காம, அப்பிடி பண்ணீட்டேன்.

இனிமே, நீ வேலைக்கு வந்துடு. உன்னை பழையபடி வேலைல சேர்த்துக்கிட்டாச்சி. மறக்காம, என்னைக்குமே புடவையை கட்டிட்டு வா. நம்ம கம்பெனில, யாரும் ஃபார்மல் டிரஸ் போட கூடாதுன்னு ரூல்ஸ் போடுறேன். எல்லா பெண்களும் புடவை தான் கட்டிகிட்டு வரணுமுன்னும் ரூல்ஸ் போடுறேன்” கேட்ட விமலாவின் முகம் மகிழ்ச்சியில் குதித்தது.

மறுநாள், அவர் அன்பளிப்பாக கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு அலுவலகம் வந்தபோது, செக்யூரிட்டி அவளை புன்னகையோடு வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்.

‘மானம் மறைப்பது அழகே’ என்று அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் புரிந்தது.

எம்.மனோஜ் குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.