புரோட்டா செய்வது எப்படி?

Parotta

தேவையான பொருட்கள்

மாவு : ½ கிலோ

தேங்காய் எண்ணெய் : 300 மி.லி.

வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி

தண்ணீர்

உப்பு : 1 டீஸ்பூன்

 

செய்முறை

மாவைச் சலித்து பாத்திரத்தில் போட்டு வெண்ணெய் உப்பு இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் விட்டு ஒன்று சேரப்பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். (500 கிராம் மாவில் 8 புரோட்டா வரும்)

உருண்டைகளின் மீது தேங்காய் எண்ணெய் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். இந்த எண்ணெயயே புரோட்டா விரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளலாம்.

மாவு உருண்டைகளை, எண்ணெய் தடவிய பெரிய பலகையில் பூரிக்கட்டையில் மெல்லிய துணி போன்றிருக்கும் மாவை சேலைக்கொசுவம் மடிப்பது போல் குட்டிச் சுருக்கங்கள் செய்து அப்படியே இருபுறமும் சுருட்டிக் கொண்டு வந்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து விடவும்.

இவ்வாறு புரோட்டா இட்டபின் தோசை சட்டியை சுடவைக்கவும். புரோட்டா சுருக்கிய உருண்டைகளாக இருக்கிறதல்லவா அதை கைவிரல் கொண்டு சுருக்கம் கலையாது விரித்து விடவும். எண்ணெய் ஊற்றாமல் புரோட்டாவை தோசை சட்டியில் போட்டு (சிறு தீயில்) எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு வாட்டிய புரோட்டாக்களை 2 தினம் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது. பிரிட்ஜில் செய்து வைத்துக் காற்றுப் புகாத பாலிதீன் பைகளில் வைத்துக் கொண்டு தேவையான சமயம் பயன்படுத்தலாம்.

இந்த வறண்ட புரோட்டாக்களை பூரிமாதிரி, குழிந்த வாணலியில் நிறைய எண்ணெய் விட்டு சுட்டால் பொறுபொறுவென்று இருக்கும். இம்மாதிரி இருமுறை புரோட்டாவை முதலில் வெறும் தோசைச் சட்டியிலும், மற்றொரு முறை எண்ணெயிலும் பொரிப்பதால் புரோட்டாவின் உள்பக்கமும் வெந்து சுவையானதாக இருக்கும்.

 

சைனீஸ் புலாவ் செய்வது எப்படி?

Chinese Pulav

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி : 1 ஆழாக்கு
குடை மிளகாய் : 1
காரட் : 1
பீன்ஸ் : 100 கிராம்
கோஸ் : 100 கிராம் (துருவியது)
புதினா : 1 கட்டு (சிறியது)
பச்சைமிளகாய் : 5
வெள்ளை மிளகுபொடி : 1 டீஸ்பூன்
அஜினோ மோட்டோ : 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் : தேவையான அளவு

 

செய்முறை

அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும். சாதம் உதிராக இருக்க வேண்டும். காய்கறிகளை 1 அங்குல நீளத்திற்கு நறுக்கி, பச்சைமிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு வதக்கவும். பின்னர் காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து ஒரு தடைவ புரட்டி ஆறிய சாதத்தில் கொட்டவும்.

அஜினோ மோட்டோ, வெள்ளை மிளகு பொடியும் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். சைனீஸ் புலாவ் ரெடி.

 

கத்திரிக்காய் மசால் செய்வது எப்படி?

Brinjal Masala

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் : ½ கிலோ
வெங்காயம் : 100 கிராம்
தக்காளி : 100 கிராம்
மிளகாய் பொடி : 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி : 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன்
பட்டை, சோம்பு,
இலவங்க இலை : தலா 1 டீஸ்பூன்
எண்ணெய் : 50 கிராம்
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

கத்திரிக்காயை நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, இலவங்கம் தாளித்து அதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் கிளறவும்.

நன்கு சுருண்டு வந்ததும் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் தூள், கத்திரிக்காய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு கால் டம்ளர் வெந்நீர் ஊற்றி வேக விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.